தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, July 27, 2008

இப்படிக்கு தீவிரவாதி....

எங்கள் கடவுள்
ஒரு இரத்தக் காட்டேறி!

மானிடக் குருதியே
அவர்தம்
அபிசேகத்திற்குரியது என்பதாலும்,
அபிசேகப் பிரியர்
அவர் என்பதாலும்

மானுடக் குவியலைக்
கொன்று குவிக்கிறோம்
கடவுளின் போர் என
வென்று மகிழ்கிறோம்.....

எங்களின்
சந்தோசம்
நிம்மதி
மோட்சம்
முக்தி
எல்லாம் எல்லாம்
மனிதக் குருதியே...

எங்களின் கொள்கை
இரத்தம்!இரத்தம்!இரத்தம்!

எங்களின் இலட்சியம்?!
இது வரை தெரியாது...

எங்கள்
தாயின் மார்புகள்
பால் சுரப்பதை விட
இரத்தம் சுரப்பதையே
அதிகம் விரும்பும்
வித்தியாசப் பிறவிகள்
நாங்கள்..

எங்கள் பூங்காக்களை
புல்லட்டுகள் பூப்பிக்கவே
பயன்படுத்துவோம்...

ஆலயங்கள் தோறும்
அணுகுண்டு விளைவித்து
எங்கள்
மகசூலைப் பெருக்குவோம்..

எம் கடவுள்
புசிக்க ஏதுமில்லாது
பசித்துக் கிடக்கையில்
எம் உயிரையே வெடித்து
சுவைக்கக் கொடுப்போம்..

மனித வெடிகளாய்
எம்மையே சமைப்போம்..

தாத்தா,பாட்டி
அம்மா,அப்பா
மாமா,மாமி
சித்தப்பா,சித்தி
அண்ணன்,அக்கா
தம்பி,தங்கை
மருமகன்,மருமகள்
மதனி,கொழுந்தியா என
உங்களைப் போல்
உறவுகள்சொல்லி
சிரித்து வாழ
எங்களால் இயலாது...

ஏனெனில்
நாங்கள்
விலங்கின் கடைசி மிச்சம்..

விலங்குகட்கு ஏது
சிரிப்பு?

ஆமாம்!
மனிதனைக் கொல்கிறோம்
மனிதனைக் கொல்கிறோம்
என்று
மார்தட்டிக்கொள்(ல்)கிறோமே...

அப்படியானால்.....
நாங்கள்.....???????????????

இப்படிக்கு
தீவிரவாதி......


Sunday, March 9, 2008

அவள்காலைப் பொழுது










அதிகாலைப் பொழுது அவள்காலைப் பொழுதாகிறது..இதோ அவளுக்காய் சில கவிதைத் துளிகள்...
அதென்ன?
உன்வீட்டு மரங்கள் மட்டும்
எப்பொழுதும்
வசந்த காலத்தையே
காட்டுகிறது..
அப்படியானால்
உலகை ஓர்முறை சுற்று
ஒட்டு மொத்தமும்
உன்னால் வசந்தமாகட்டும்.!
அதோ!
பசுந்தளிர்களின் நுனியில்
காத்துக் கிடக்கிறது
நேற்றைய மழையின்
மிச்சத்துளிகள்
உடனே வெளியில் வா
உன் மீது விழுந்து
பிறவிப்பயன் எய்தட்டும்....

கதிரவன் வந்து
கற்புடைக்கும் முன்
சாப விமோச்சனம்
கிடைத்து விடாதா என
புற்களின் நுனியில்
புலம்பிக் கிடக்கிறது
பனித்துளிகள்..

வா வந்து பதித்துவிட்டுப் போ
உன்
பாதகமலங்களை....


தயவு செய்து
துயில் எழு!
இல்லையேல்
இருள் இன்னும்
நீளக் கூடும்..

ஆம்!
உன் முகத்தில்
முழிப்பதற்காகவே
தன் முகத்தை
மூடி நிற்கிறான் சூரியன்...

எவ்வளவு நேரம்தான்
மலராமல் இருப்பது?
வா ! வந்து
வாசம்(ல்) திறந்து விடு
பாவம் அரும்புகள்...

கொடுத்து வைத்தவளடி நீ
வார்த்தைகள் கூட
உனக்காய் தோன்றியதுபோல்
வந்து குவிகிறதே!

முதலில் உனக்கு
திருஷ்டி சுற்றி போடவேண்டும்
திருஷ்டியோடு சேர்ந்து
சகலமும்
உன்னை சுற்றுகிறதே!

யார் சொன்னது?
ஒளீச்சேர்க்கை என்பது
தாவரத்திற்கு மட்டும்தான் என்று..

அவள் தாவணீ செல்லும்
திசை நோக்குங்கள்
உங்கள்
உயிர் செல்களும்
ஒளியை ஒட்டிக்கொள்ளும்..





Saturday, March 8, 2008






சொல்லியிருக்க வேண்டும்
அவனிடம்!

சக தோழனாய்
என் சரித்திரம் புரிந்தவன்
சதா சர்வமும்
புகைத்தே கழித்தவன்..

சொல்லியிருக்கலாம்தான்...

மூச்சுக்குள் புகை நிரப்பி
தேனீர் தொட்டுக் கொள்ளும்
தெருக் கடைப் பொழுதுகளிலேனும்..

அலுவலக நேரத்து
மிச்சங்களில் எல்லாம்
ஆளாய் பறக்கும்
"ஒரு தம்" நொடிகளிலேனும்...

சின்னதாய் ஒரு உலகம்
சிந்தனை ஊக்கி
எனும்
சிகெரெட் புராண
தருணங்களிலேனும்..

அக்கா பிள்ளை
ஐம்பது பைசா கேட்கும் போதும்
பிச்சைக் கிழவன்
பொக்கை வாய் இளிக்கும் போதூம்
மறுக்கும் அவனது கரங்கள்
கரன்சியை
காகித சாம்பலாக்க
அனுமதிக்கும் நொடிகளிலேனும்...

சொல்லியிருக்கலாம்தான்...

என்ன செய்வது?
கூடி இருக்கையில்
குறைகள் மறைப்பதும்
பிரிவைக் குறை தரின்
குமுறித்துடிப்பதும்
பாழும் மனிதனின்
பழக்கமாயிற்றே!

இருப்பினும்
சொல்லத் தோணிற்று

அவன் குழந்தை
அம்மா என்று
முதல் வார்த்தை முகிழ்க்கையில்
ஆனந்தப்படாத
அவன் மனைவி
அப்பாவை விளித்தால்
என் செய்வேன் என
கதறி அழுத கணத்த நொடிகளில்...

ஆதலால் தோழா....

வேண்டாம் உனக்குப் புகை
அது
எமனின் இன்னொரு வகை..

சுவாசம் என்பது மூச்சு
அதில்
சுத்தம் இல்லையேல் போச்சு...

உன்
விரல் இடுக்கிலேயே
நசுக்கப் படுகிறது
உனக்கான சந்ததி...

உன்னாலேயே
வைக்கப்படுகிறது
உன் ஆண்மைக்கான ஆப்பு...

உன் நரம்புகள் நாசம்
ஜீன்களில் விஷம்
சுவாசம் முழுதும் சாக்கடை....

புகையோடு சேர்த்து எரிகிறது
உன் பொருளாதாரத்தின்
ஒரு பகுதி.....

மறந்துவிடடதே
பிராண வாயுவின்
பிரதாண இடத்தில்
ஆயுளை நீட்டிக்கும்
அறைகளின் உட்சுவற்றில்
தயாராகிறது
உனக்கான ஒரு பாடை...

புகை தேங்கும் காற்றறை
உன் சிதை மூடும்
கல்லறை..

பாவம் உன் இரத்தம்
ஆக்சிஜன் அற்று
நிக்கோட்டின் பிடிக்குள்....

சொல்லிமுடித்துவிட்டேன்..

அவனுக்கு புரிய
வாய்ப்பில்லை
இருப்பினும்
அவன் கல்லறைக்கு அருகில்
அவசர இடம் தேடும்
இன்னொரு
நிக்கோடின் மனிதனுக்கு??!!


அதோ!
உச்சந்த் தலையில்
வெயிலை உடுத்தி
உடற்சுவற்றில்
உப்பை வடித்து
உழுது உழுது தேய்கிறானே
ஓர் பாமரன்
அவர் என் அப்பாதான்...

ஓர் அந்திக்கு முந்திய
அவசரப் பொழுதில்
அப்பா பசியை பொறுக்காத அம்மா
அரிசிச் சோற்றைக்
கொடுத்தனுப்பினாள்
காய்ந்தவயிற்றோடு
கழனியில் நிற்பவருக்கு..

வறப்பு சகதியில்
வதைக்கும் வெயிலில்
கையில் சோற்றோடு நான்..

பூரிப்பார் என்று
புன்னகை செய்கிறேன்.

வறண்ட குரலில்
தோள் பதிந்து சொன்னார்
"எங் கஷ்டம்
என்னோட போகட்டும்
எதுக்குப்பா இந்த
வெயில்ல வந்த"!

அதோ
புல்லறுக்கப் போகயிலும்
பிள்ளையையே நினைத்து
புல்லோடு சேர்த்து
விரலறு பட்டு
சிவப்பாய் வழிகிறதே
தாய்ப் பாலின் ஒரு பகுதி
அக் குருதியின் சொக்காரி
என் அம்மாதான்..

பள்ளிச் சட்டைப்
பழசாய்ப் போனதால்
புதிய சீருடை
வேண்டும் என்கிறேன்..

பள்ளிக்குச் சென்று
வீடு திரும்பையில்
பூத்துக்கிடந்தன
புதிய சட்டைகள்

உடனே அணிந்து
உவகை மிகுந்து
நன்றி சொல்ல
நானும் நிமிர்கிறேன்...
அவள்
காதணி அவிழ்த்ததை
மறைத்தபடியே தொடர்கிறாள்
"நீ ராச மாதிரி
இருக்கடா.."

அதோ
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வைஎன
எதுவுமே இல்லாது
குனிந்து குனிந்து
கூன் விழுந்து
பீடி சுற்றி மாய்கிறாளே
ஓர் சகோதரி
அவள் என் தங்கைதான்..

தன் குருதியைப்
பலமுறை
என் எழுதுகோலுக்கு மையாக்கிய
அவள்தான் சொல்கிறாள்

"நீ ந்ல்லா வருவேனு
நம்பிக்கை இருக்கு
எங்களப் பத்தின
கவலைய விடு
படி! படி! படி!...

இப்படி
பொத்தி பொத்தி
பாத்து பாத்து
பாசத்தோடப் பின்னப்பட்டவந்தான்
நான்...

ஆனாலும்
அவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை...

உச்சி வெயில்ல
நான் வேர்க்க வேர்க்க
அலையுறதும்...

கெடச்சத சாப்ட்டு
கிழிஞ்சி போயி
கெடக்குறதும்...

வருத்தப்பட்டு
பாரம் சுமக்குறதும்....

ஆனாலும்
அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை...

தயவு செய்து
சொல்லிவிடாதீர்க்ள்...

ஏனெனில்
வருத்தப்பட அவர்களுக்கு
நேரமிருக்காது
செத்துப்போகக்கூடும்.




Saturday, January 5, 2008

முதிர்கன்னி


விரும்பிய படியே
மணாளன் அமைய
விரும்பும் பாவையர்
ஒன்று கூடி
இருக்கும் நோன்பே
பாவையர் நோன்பென்றும்

கடவுளை விரும்பிய
ஆண்டாள் கூட
கண்ணனை அடைந்தாள்
என்பதுதான்
இந்த நோன்பின் சிறப்பென்றும்

மார்கழி தோறும்
நோன்புகள் இருந்து
மணாளன் நோன்பைத்
தொடர்கிறாயே அக்கா..!

அகவை நாற்பதைத்
தாண்டியபின்னுமா
புரியவில்லை
நோன்பின் சிறப்பு.?


Wednesday, January 2, 2008

அன்பில்லா இறைவனுக்கு...




அன்பில்லா இறைவனுக்கு
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்...

பாவம்,புண்ணியம்
இன்பம்,துன்பம்
நன்மை,தீமை
இவையெலாம்
உன் பார்வைக்கு
உட்பட்டவையே




நீதான் உயிர்களை
படைப்பதாய்
புராணமும் தன்
புழுகலை
காலத்தின் மீது
தடவிக்கொண்டே வருகிறது

பின் ஏன்
நல்லவன்,கெட்டவன்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
ஏழை,பணக்காரன்
நோயாளி,சுகவாசி
என்ற
துருவ வித்தியாசங்கள்?


படைக்கும் போதே
நல்ல ஜீன்களை
விதைத்து
கெட்ட ஜீன்களை
விடுக்கும்
வித்தை தெரியவில்லையா
உனக்கு?
எத்தனையோ யுகங்கள்
கழிந்த பின்னுமா
உன்
விஞ்ஞான அறிவில்
விருத்தியில்லை?


உன் பெயர்
சொல்லித்தானே
நீ படைத்த உயிரை
நீ படைத்த உயிரே
கொன்று குவிக்கிறது
இதுதான் உன்
படைப்பிலக்கணமா?


நீ மட்டும்
நினைத்த போதெல்லாம்
அவதாரம் எடுத்து
அற்புதம் நிகழ்த்தி
அசத்தல் நாயகனாய்
அச்சேறிவிட்டாய்..


காதல்,காமம்
கேலி,கிண்டல்
என
சுவாரஸ்ய வாழ்வை
தொடர்கதையாக்கினாய்

ஆனால்
உன்
தொண்டர்கள் மட்டும்
நிறைந்த ஏக்கங்களோடு
கிழிந்த கோவணங்களாய்


நடிகனுக்கும் உனக்கும்
என்ன வித்தியாசம்?


நடிகனின்
அவதாரத்தை
ரசிகன் ரசிக்கிறான்
தன் மானம் கிழிந்ததை
மற்றையோர்
ரசிப்பதுகூட தெரியாமல்


உன் தொண்டர்களும்
அப்படியே...

இருப்பினும்
நடிகன் என்பன்கூட
நிஜமாகிறான்
கண்கூடாய் சில
நல்லவை செய்வதால்


ஆனால் நீயோ
இல்லாதவன் என்று
தெரிந்தபோதும்
இருப்ப்தாய்த்தானே
இலக்கியம் விரிகிறது


ராமராகவும்
யேசுவாகவும்
நபிகளாகவும்
புத்தராகவும்
என் அவதாரங்கள்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கும் எனும்
உனது
கட்டுக் கதைகளை
இனி நம்பத்
தயாராக இல்லை



இது கலியுகம் அல்ல
பலியுகம்
உணர்வுகள் பிதுங்கிய
வலி யுகம்

உன்னை நினைக்கும்
அந்தக்
கணங்களில்கூட
எங்கள்
கால்களின் கீழே
குண்டுகள் வெடிக்கக் கூடும்


ஆதலால்
எங்கள்
கவனம் முழுதும்
எச்சரிக்கை நோக்கியே


ஆலயங்கள் தோறும்
அபாயங்கள்
இருப்பதாய்த்தான்
எங்கள் குழைந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள்


மத அடயாளங்கள்
மரணத்தின்
வாசற் கதவுகள்
என்பதைப்
புரிந்துகொண்டுவிட்டோம்


ஆதலால்
ஒன்று செய்..
நல்லதோர்
உலகைக் கொடு
இல்லையேல்
உன் ராஜினாமாவை
நீயே பகிரங்கப்படுத்து..


ஒட்டுமொத்த உயிர்களும்
உன் மீது
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
கொண்டுவரும் நாள்
வெகு தொலைவில் இல்லை...















Monday, September 24, 2007

நீயும் நானும்

என்னதான் இருந்தாலும்
மறக்கமுடியாதது
கடந்த காலம் மட்டும்தான்...

நினைவிருக்கிறதா தோழா?
ஓர் மதியத்தின் உச்சிவேளை
அகோர பசி என்று
என்னிடம்
அடைக்கலமானாய்
உயிர் போகிறதென்று
விழி விரித்தாய்...

வறுமையின் தேசியபானம்
கண்ணீர் என்பதை
அன்றுதான்
உணர்ந்தேன்....

ஒரு நேரத்து பசியைக்கூட
உன்னால் தாங்க முடியாது
என்பது எனக்கு தெரியும்....

எப்படியேனும்
உன் பசி போக்கி
உயிர் நீட்டவேண்டும்
எனும் நோக்கில்
உனக்கான இரையை
தேட முற்பட்டேன்...

உன் மெலிதான புன்னகை
என் மீது
நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை
உறுதிசெய்யும்
அதே வேளையில்.....

என் கால்கள் இயங்க மறுக்க
மயக்கமுற்று
மூச்சையானேன்...

பதறிய நீ
தண்ணீர் தெளித்து
என்
தலை தாங்கினாய்....

இருண்ட கண்களை
இயக்கிப் பார்த்தேன்
மங்கலாய்
நீ தெரிந்தாய்...

செவி அடைப்பையும் மீறி
மெல்லியதாய் புன்னகைத்தோம்
தூரத்தில் எங்கோ ஒலித்த
பட்டமளிப்பு விழாவின்
கல்லூரிக் கரவொலியைக்
கேட்டுக் கொண்டே......


Monday, January 1, 2007

உழவர் திருவிழா !

பாட்டாளி வர்க்கத்திற்கு
இன்றுதான்
பட்டமளிப்பு விழா !

நரம்புகள் வரம்பு மீற
வியர்வைகள் வெள்ளை ரத்தமாய் கசிய
கழனியில் கால் பதிக்கிறானே
அந்தக் கடவுளின் திருவிழா!

உயிரை விதைத்து
பயிரை வளர்த்து
உன்னையும் என்னையும் உயிர்ப்பித்தானே
அந்த உழவனின் திருவிழா!

சூரியனை நிலவாக்கி
கடும் சூட்டைப் பனியாக்கி
உயிரை அற்பமாக்கி
உனக்காக வாழ்கிறானே
அந்த உத்தமன் திருவிழா!

நாவின் இனிமைக்கும்
உன் நவரச உணவிற்கும்
தன் ஆவி இழக்கிறானே
அந்த நல்லவன் திருவிழா!

விண்ணுக்கு சென்று
நிலவைத் தொடுபவன்
நீயாக இருக்கலாம்
ஆனால்
மண்ணுக்குள் புதைந்து
பல மணிகளைத் தருபவன்
என்னவன் அல்லவா!

என்ன நிலவிலும்
நீர் இருக்கிறதா?
போதும்! போதும்!
பூமியிலேயே
இப்புண்ணியவன் படும் கஷ்டம்!

புசிப்பது நாம்
நன்றாய் வசிப்பது நாம்
வாழ்வில் கசிவது மட்டும்
அவன்தானாம்
அது ஏன் ?

ஊரைத் திருத்தலாம்
நாட்டைத் திருத்தலாம்
ஏன்!
இந்த உலகையே திருத்தலாம்
ஆனால்
என்னவன் மட்டும்
மண் நிலம் திருத்தாவிடில்
உன் நலம் எங்கே
உயரப் போகிறது!

வியர்வைத் துளிகளின்
வித்தியாசப் பரிமாணம்தான்
கரும்புச் சாறு
இனிப்பென்றா நினைத்துவிட்டாய்!
ஆம்!
உன் உளம் இனிப்பாக
என்னவன் உரமாகிறான்.

அதோ பாருங்கள்
தன்னை ஈன்றவனுக்கு
தலை வணங்கும் பயிர்களை!

அங்கேத் தெரிவது
நெல் மணிகள் அல்ல
என்னவன் சிந்திய
இரத்தத் திட்டுக்கள்!..


Saturday, December 16, 2006

இப்படிக்கு ஆயுள்கைதி!

"கடிதம்" இந்த சொல் இப்பொழுது வழக்கில் உள்ளதா என்பதே சந்தேகம்தான்..! கால மாற்றம் சிலவற்றை சுருங்கச் செய்துவிட்டது.. அப்படி சுருங்கியவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்....

கடிதம் என்பதே ஓர் இலக்கியம் என்பதை இங்கே எத்தனை பேர் அறிவோம்? அது கதை சொல்லும் , காதல் சொல்லும் , நட்பு சொல்லும்.......,

சந்தோஷம், அழுகை, கோபம், தாகம், வெட்கம் , ஏக்கம், தவிப்பு, என உணர்ச்சிகள் சொல்லி உயிரை நீட்டிக்கும்....

கடிதம் என்பதே உறவுகளைப் புதுப்பிக்கும் ஓர் களம் அல்லவா?

கனவுகள் பூப்பிக்க, கற்பனை தருவிக்க, கடந்த காலத்து மிச்சங்களை....,

காலச்சுவடுகளில் நம்மைப் பற்றிய பதிவுகளை....., நம்மை நாமே அறிந்துணரும் ஓர் பொக்கிஷம் அல்லவா..!

புல்லரிக்க செய்வதும், பூப்பூக்க செய்வதும், செல்லரிக்க செய்வதும், செத்துப்போக செய்வதும் கடிதம் அன்றி வேறேது?..

உன்னை நீ அறியவும் , மற்றவர் உன்னை அறியவும்,..அறிதலும் அறிதல் நிமித்தம் பணித்தலும் கடிதம்தானே!

கடிதம் நம் இறந்த காலத்து உயிர்ப் பிம்ம்பங்களை நிகழ்காலத்தில் காணச்செய்யும் அதிசயக் கண்ணாடி !

இப்பேர்பட்டக் கடிதத்தை நம்முள் எத்தனை பேர் இன்று எழுதுகிறோம் ???? நாம்தான் நினைத்த உடனேயே தொலைவில் இருப்பவரை தொடர்பு எல்லைக்கு உட்பட்டவராக்கி தொலைபேசியில் தொடர்கிறோமே! பிறகு எங்கே கடிதம் எழுதுவது...?
சரி!சரி! விஷயத்திற்கு வருகிறேன்..எத்தனையோ கடிதங்கள் நம்மைப் பாதித்ததுண்டு, பாதிப்பதுண்டு..
அப்படி சமீபத்தில் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது ஓர் கடிதம்....
from வேலுர் மத்திய சிறை என்ற சுயத்தோடு நம்பிக்கை என்ற விலாசத்திற்கு மன்னிக்கவும் ஜனா என்ற சிறுவனுக்கு வந்திருந்தது அக்கடிதம்...
அன்புள்ள ஜனாவுக்கு எனத் தொடங்கும் அக்கடிதம் பல உணர்ச்சிக் கவிதைகளை உள்ளடக்கி இப்படிக்கு ஆயுள் கைதி என முடிந்திருந்தது...
யார் இந்த ஜனா ?


6 வருடங்களுக்கு முன்பு வரை எல்லோரையும் போல் துள்ளிக்குதித்தவன் தான் இந்த ஜனா எனும் சாதா சிறுவன் ஆனால் இன்றோ இரு கைகள் ஒரு கால் என முக்கிய அவயம் முழுதும் இழந்து முடமாய் அல்லாது முயற்சியால் உயர்ந்து நிற்கும் சாதனைச்சிறுவன்..

அச்சிறுவனுக்குத்தான் ஆயுள் கைதியின் மடல்......
ஆம் ஓர் மின்சார விபத்தில் முடமானான்...ஆனால் அவனோ கைகள் இல்லா விடில் என்ன முடங்காது தன் வாயால் எழுத்துக்களை, வண்ணங்களை,எழுத ஆரம்பித்தான்..
இன்றோ இருமுறை ஜனாதிபதி விருதும்...பல ஓவியப்போட்டிகளுக்கு நடுவராகவும் உயர்ந்து நிற்கிறான்.
இவன் சாதனை எல்லாப் பத்திரிக்கைகளிலும் பதிவாகியுள்ளது..அப்படியோர் பதிவுதான் இந்த ஆயுள் கைதியைப் பாதித்துள்ளது...அதன் விளைவுதான் இம்மடல்..
அதிலும் குறிப்பாக ஆயுள் கைதியின் ஓவியம்,உயர்தர வரிகள்...என்னை மிகவும் பாதித்தது...
"என் இரு கைகளையும் உனக்குத் தருகிறேன் பதிலுக்கு உன் நம்பிக்கையை எனக்குத் தா என அந்த கைதி வேண்டுவது உணர்ச்சியின் உச்சம்!....(ஒரு குறும்பட தகவலுக்காக அந்த சாதனை சிறுவனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது...அப்போதுதான் அக்கடிதம் பார்த்தேன்)
ஜனாவைப் பற்றிய நிஜங்கள் அறிய இங்கே சுட்டவும் www.azhagi.com/jana ....


Sunday, December 10, 2006

அத்தமக ஒனக்காக...

சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு ஒன்றைப் படித்தேன்,
வாய் மொழி இலக்கியம் இன்று எழுத்துருவில் வந்ததில் மகிழ்ச்சி...
சரி நம்மாளுக்கு நாமளும் ஒரு நாட்டுப்புறப் பா எழுதலாமேனு யோசிச்சேன் ...
இதோ இந்த பழய பட்டிக்காட்டானின் புதிய வரிகள்....

சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சி
சித்திரமா சேல கட்டி
வட்டநிலா பொட்டு வச்சி
வடிவழகா போறவளே-உன்

எண்ணத்தில நா இருந்தும்
என்ன விட்டுப் போறியடி
இன்னுமொரு மொறமாமன்
இனி ஒனக்கு இல்லையடி..

அத்த மக ஒனக்காக
அமெரிக்கா போவனும்னு
வெட்டி வெத வெதச்சேன்
வெதச்ச நெல்லும் அறுத்து வச்சேன்...

சிமிளி வெளிச்சத்தில
சீண்டி விடும் இடையழக
கரண்டு வெளிச்சத்தில
கண்டு வர நா நெனச்சேன்

ஓலக்குடிசையில
ஒத்தயில இருப்பேனு
ஒசத்தியா ஓட்டு வீடு
ஒனக்காக கட்டி வச்சேன்

ஆட்டு விரலாட்டி
ஆயுசு குறயுமுன்னு
கரண்டு கிரைண்டரொன்னு
கடையில நா பாத்து வச்சேன்

அம்மிக்கல்லு நச்சி
அந்நிக்கு நீ அழுதையின்னு
அழகான மிக்சி ஒன்னு
அடுத்த நாளே வாங்கி வச்சேன்

தேக்கு மரக் கட்டிலிலே
தேவியம்மா நீ படுக்க
வாக்கு சொல்லி வந்து விட்டேன்
வடிவழகா செஞ்சு வெக்க

உச்சி வெயில் நேரத்தில
உள்ளங்கை வேக்குமுன்னு
கச்சிதமா காத்தாடி
கடயில நா வாங்கி வச்சேன்

ஒடக்கருவ வெறவு வச்சி
ஒக்காந்து பொக மூட்டி
ஒருவெறவும் எரியலேனு
ஒப்பாரி வச்சயீன்னு

காரு ஏறி கடைக்குப் போயி
காஸ் அடுப்பு வாங்கி வந்து
காட்டனும்னு ஓடி வந்தா
கண்டுக்காம போறியடி...


Sunday, November 26, 2006

அன்பு

மனிதனை
நேசிக்கும் மரபு
மனதில் பூக்கும்
மாண்பு
உயிரை துலக்கும்
விசித்திரம்
ஆயுளை நீட்டிக்கும்
அமிர்தம்
உணர்ச்சிகளின்
டானிக்...........