தேடலும் தேடல் நிமித்தமும்..

Monday, September 24, 2007

நீயும் நானும்

என்னதான் இருந்தாலும்
மறக்கமுடியாதது
கடந்த காலம் மட்டும்தான்...

நினைவிருக்கிறதா தோழா?
ஓர் மதியத்தின் உச்சிவேளை
அகோர பசி என்று
என்னிடம்
அடைக்கலமானாய்
உயிர் போகிறதென்று
விழி விரித்தாய்...

வறுமையின் தேசியபானம்
கண்ணீர் என்பதை
அன்றுதான்
உணர்ந்தேன்....

ஒரு நேரத்து பசியைக்கூட
உன்னால் தாங்க முடியாது
என்பது எனக்கு தெரியும்....

எப்படியேனும்
உன் பசி போக்கி
உயிர் நீட்டவேண்டும்
எனும் நோக்கில்
உனக்கான இரையை
தேட முற்பட்டேன்...

உன் மெலிதான புன்னகை
என் மீது
நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை
உறுதிசெய்யும்
அதே வேளையில்.....

என் கால்கள் இயங்க மறுக்க
மயக்கமுற்று
மூச்சையானேன்...

பதறிய நீ
தண்ணீர் தெளித்து
என்
தலை தாங்கினாய்....

இருண்ட கண்களை
இயக்கிப் பார்த்தேன்
மங்கலாய்
நீ தெரிந்தாய்...

செவி அடைப்பையும் மீறி
மெல்லியதாய் புன்னகைத்தோம்
தூரத்தில் எங்கோ ஒலித்த
பட்டமளிப்பு விழாவின்
கல்லூரிக் கரவொலியைக்
கேட்டுக் கொண்டே......


Sunday, April 15, 2007

வித்தியாசம்...!

என்னை வியர்டு விளையாட்டுக்கு அழைத்த திருமதி மங்கை அவர்களுக்கு நன்றி...!வித்தியாச குணங்களை வரிசைப்படுத்துமாறு வேண்டுகோள்...இதோ தொடர்கிறேன்...

வித்தியாசம் என்பதே புதுமையின் வெளிப்பாடுதான்..வழக்கமான யதார்த்தத்திலிருந்து புதியதாய் ஓர் யதார்த்தம் சேர்க்கும் முயற்சி...வித்தியாசம் என்பது மட்டும் இல்லையெனில் நாம் இன்னும் அம்மணமாய்த்தான் அலைந்து கொண்டிருப்போம்..
ஆதி மனிதன் அவன் போக்கில் அலைந்து திரிகையில் யாரோ ஒருவன் மட்டும் அம்மணத்தின் அவஸ்தயை உணர்வதில் வித்தியாசப் பட்டிருக்கிறான்..அதன் பிறகே நாம் இலை ஆடை தரித்து சில இம்சைகள் தவிர்த்தோம்..
ஆம்..! எடிசனின் வித்தியாசம் ஒளியை விரித்தது..ஒளி இந்த உலகயே விரித்தது....அந்த விரிந்த உலகமோ ஓர் எலியின் பிடிக்குள்(அதாங்க computer mouse)....என்ன விந்தை இது ஓர் எலியைப் பிடித்து வைத்து இந்த உலகையே உட்கொள்கிறோம்!....



எனது வித்தியாசம் என் பால்யத்திலேயே தொடங்கிற்று எனலாம்..
எப்பொழுதெல்லாம் என் தாயார் என்னையும்,என் தங்கையின் காதில் புள்ளியாய்த் தெரியும் வடுவையும் ஒன்றாய் பார்க்க நேர்கிறதோ அப்பொழுதெல்லாம் என்னை செல்லமாய் திட்டும் வார்த்தை "பாவி பய பால பூராம் குடிச்சிட்டு தங்கச்சிய மட்டும் நோஞ்சான் ஆக்கிட்டான்" என்பதுதான்..
ஆம்! நான் குழந்தயா இருக்கச்சே தாய்ப்பால் தவிர வேற எந்த உணவும் எனக்கு ஆகாதாம்,சதா சர்வகாலமும் தாய்ப்பாலே உணவாக கிடந்திருக்கிறேன்...
எனது உயிரை நீட்டிக்க தன் உயிரையே சமைத்துக் கொடுத்திருக்கிறாள் அந்த தாய்..தன் உயிர் உருகி வெள்ளை ரத்தமாய் கசியும் அவ்வமுதை நான் உறிஞ்சும் போதெல்லாம் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் என் தாய் ..அவ்வமுது தவிர வேறெதுவும் உணவாய்ப் படாததால்,நான் பக்குவப் பட்ட பின்னும் பால் தருவதைத் தொடர்ந்திருக்கிறாள்..என் விழிகள் சுரக்காதிருக்க அவள் அமுது சுரந்தாக வேண்டும்.... இது என் தங்கையின் பிறப்புக்கு பின்னும் தொடர்ந்திருக்கிறது...
ஓர் நாள் அமுதைத் தேடி அம்மாவை நெருங்குகிறேன் அங்கே என் தங்கை தன் ஆயுளை நீட்டித்து கொண்டிருக்கிறாள்..நான் அருகில் சென்று விலக்கியும் அவள் அமுது சுவைப்பதை நிறுத்தவில்லை..
மார்போடு என்னை அணைத்து பாலை மட்டுமல்ல பாசத்தையும் ஊட்டும் அந்த சுகம் கிடைக்காதோ என்ற ஆத்திரத்தில் எனக்குமட்டுமே சொந்தம் எனும் ஏகபோக உரிமையில்..அருகில் கிடந்த பாத்திரத்தை வீசியிருக்கிறேன்...அது ஒரே நேர்கோட்டில் ஓங்கி கிழித்திருக்கிறது என் தங்கையின் செவியை..
இரத்தம் சொட்ட சொட்ட என் தங்கை அழுது துடித்திருக்கிறாள்..
பின் என் தங்கை புட்டிப் பாலுக்கும் நான் மீண்டும் தாய்ப் பாலுக்கும் மாற்றப்பட்டிருக்கிறோம்... இப்படி வில்லத் தனமாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது எனது வித்தியாசம்..
சென்ற தீபாவளிக்கு ஊருக்கு சென்று தங்கையைப் பார்த்தேன் தாய்மையின் மகிழ்ச்சியில் நெஞ்சோடு அணைத்திருந்தாள் அவளின் குட்டி தேவதையை...அருகில் தன் தாயின் செவிகளை வருடிக் கொண்டெ
" புட்டிப் பாலை"ருசித்துக் கொண்டிருந்தான் என் மருமகன்...உன் தங்கையை எடுத்து செல்லவா என்று விளையாட்டுக்காய் அவனிடம் கேட்டு தங்கயைத் தொட முயல்கிறேன் அவன் புட்டியை எடுத்து வீச முற்படுகிறான்...நான் சிரித்துக்கொண்டேன் ..மாமனுக்கு ஏத்த மருமகன்தான்..!


என் தந்தையின் நெஞ்சு முடிகளில் நீந்திய காலங்களில் அவரின் செல்லக் கொஞ்சல்களுக்கிடையில் என்னை செதுக்கவும் முயற்சிப்பார்..கருஞ் சிலேட்டில் வெள்ளையாய்க் கோடுகள் கிழித்து கொக்கு,குருவிகள் அறிமுகம் செய்து வைப்பார்..நாமும் செய்தால் என்ன?நானும் முயற்ச்சித்து ஒருமுகப் பட்டேன்..எனது கலைக்கான முதல் சுழி அந்த கருஞ் சிலேட்டில் அன்றே பதிவாயிற்று...( pencil drawing state level price வாங்கியிருக்கேன்,...)
எனது உயர்கல்வி பருவம்...., இலங்கை வானொலி நேயர்களின் சொந்த கவிதையை சினிமா பாடல்களின் மெட்டிற்கு ஒலிபரப்பிய நேரம்..அட நாமும் செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஒரு பாடலை எழுதினேன்.....
வீட்டில் மட்டுமல்ல வகுப்பிலும் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது..எனது முதல் எழுத்து அன்று பதிவாயிற்று...குமுதம் bookல எனது கானா வந்திருக்குன்னா அதுக்கு காரணம் அக்கவிதை மற்றவற்றிலிருந்து வித்தியாசப் பட்டிருப்பதுதான்...
எங்க ஊர் பாண்டியப்பா டீக்கடையில பல குரல் கேசட் போட்டாச்சுன்னா மொத ஆளா ஓடிப்போயி கேசட் முடியிற வரைக்கும் கேட்பேன்...ஒரே ஆளு இத்தன குரல் பேசுராங்களே..நாமும்தான் பேசுவோமே என முயற்ச்சித்தேன்...ஓட்டு வீட்டு உள் மாடியில் ஓங்கி கத்த ஆரம்பித்தேன்....
பிறகு எங்கள் பள்ளியின் hostel dayல் முதன் முதலாக mic பிடித்து mimic செய்தேன்.....அது தொடர்ந்தது பல மேடைகளில்....எனது இந்த வித்தியாசம்தான் என்னை தமிழ் சினிமாவின் heroவாக்கியது..எனது இந்த வித்தியாசம் தான் எங்கோ ஓர் வயல்வெளியின் மண் காத்துக் கிடந்த என் ஏழைப் பெற்றோரை AVM studioவின் சான்றோர்கள் மத்தியில் பெரிதுவக்கச் செய்தது........பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்காமல் நாட்கள் நீண்ட போதிலும் தளராது நான் தரமாகிறேன் என்றால் அதற்கு காரணமும் இந்த வித்தியாசம்தான்..என் படத்தைப் பற்றி அறிய www.chennaionline.com/film/newlaunches/04passport.asp (passport என்பது படத்தின் பெயர்)







குறும்புத்தனம் ! இன்றும் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பது...என்னையே என்னுள் refresh செய்வது.....இது வித்யாசத்தை மட்டுமல்ல வில்லங்கத்தையும் ஏர்படுத்தக்கூடியது...(எ.கா) பொதிகை மலையின் நீர் பரப்பில் நண்பர்களோடு எனது பொழுதுகள் மகிழ்ச்சியாய் விரிந்த காலம் ஓர் சாரல் பொழுது கவனிப்பாரற்று calm மாய் கழிகிறது.....போரடிப்பதாய் நண்பர்கள் சொல்ல நான் வித்யாசம் தேடினேன் .....மற்ற மக்கள் ஏதோ குளிக்க மட்டுமே வந்தவர்கள்போல் குளித்துக் கொண்டிருக்க.....அவர்களின் கவனம் எங்கள் மீது திரும்ப ஓர் வித்யாசம் உதித்தது...
ஆம்...நண்பர்கள் அனைவரயும் இலை தளை தரித்து ஆதி மனிதன் போல் getup change செய்தேன்......இலை ஆடை தரித்து கைகளில் இலைகளுடன் ஹோஹோ.....ஹொய்யாலா..ஹோ ஹோ ....என கோரசாக பாடி ஆடவும் செய்தோம்......அவ்வளவுதான் மொத்த கூட்டமும் அந்த வித்யாசம் கண்டு வியந்து தங்கள் சந்தோஷத்தைப் புதுப்பித்தார்கள்....கல கலப்பாய் அந்த பொழுதும் கழிந்தது....
எ.கா.2:கன்னியாகுமரி...விவேகானந்தரின் ஞானஸ்தலம்.....நண்பர்களோடு நானும் சுற்றிப் பார்க்கிறேன் ....எனக்குப் பின்னால் சில வெளிநாட்டார்கள் தஸ் புஸ்சில் வந்து கொண்டிருந்தார்கள்...அவர்களைக் கலாய்க்க வேண்டும் என் செய்வது ? வித்யாசம் தேடினேன்.....அவர்கள் எங்களைத் தொடர்வதை சாதகமாக்கிக் கொண்டேன்....ஒவ்வொரு இடமாய் பார்த்து வருகிறோம் பின்னால் அவர்கள்.....ஓர் இடத்தில் வெறும் பாறை வெயிலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது அதுவரைக்கும் அது சாதாரணப் பாறைதான் ஆனால் என் குறும்புத்தனத்தால் அதை தெய்வாமாக்கி தொட்டு கும்பிட ஆரம்பித்தேன் என் தோழர்களும் அதையே செய்தனர்....பாவம் தொட்டு வணங்க அந்த வெள்ளையர்களும் தயார்...எங்களுக்கு சிரிப்பாய் வந்தது..அந்த வணங்குதலை உள்வாங்கிக் கொண்டு எங்கள் வாய்களுக்குப் பூட்டு வைத்தோம்...பிறகு எங்களைப் பார்த்தார்கள் மீண்டும் வித்தியாசம் தேடினேன்..அந்த உச்சி வெயிலில் அப்படியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பித்தோம்.....மெல்ல கண்கள் திறந்தால் அவர்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாது தியானித்திருந்தார்கள்....பாவம் அவர்கள் நம் மீது வைத்த நம்பிக்கை அது..நாசம் செய்தது இப்பொழுது புரிகிறது....பகவான் எங்களை மன்னிப்பாராக!..இன்னும் குறும்புத்தனங்களை பதியலாம்....உங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டே..!.

சரி எனப்பட்டால் எதுவரினும் எதிர்கொள்வேன்.....
st.xaviers autonomous college இப்படிசொல்லும் போதே என் நெஞ்சு நிமிரும்....ஓர் கவுரவம் பிறக்கும்...அப்படியோர் புனித கல்லூரி எங்கள் கல்லூரி....ஜாதீய தூசுகள் சிறிதும் இல்லாத சமத்துவக் கல்லூரி அது...ஆனால் எங்களுக்குள்ளும் ஜாதீயம் சதி செய்தது.....ஓர் chairman election என் சார்பில் எனது நண்பன் நிற்கிறான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் வேறு ஜாதி...எதிரணியிலும் எனக்குத் தெரிந்த நண்பன்தான் சமூக முத்திரைப்படி அவனும் நானும் ஒரே ஜாதி.....இப்பொழுது கவுரப் ப்ரச்சனை தலையெடுக்கிறது...என் ஜாதிக்கு எதிரானதால் எதிரணி என்னை துரோகி என முத்திரைக் குத்துகிறது......என்னோடு இருந்த என் ஜாதியர் பலரும் எதிரணியில் ஆஜர்....நான் மட்டுமே தனித்து என் நட்புக்காய் துணிகிறேன்..
தேர்தல் நடக்கிறது எதிரணி அரசியல் முக்கியப் புள்ளியின் வாரிசு என்பதால் கல்லூரி வாசலில் ஆசிட் முட்டை சகிதம் அடியாட்கள்...இருப்பினும் அவர்களை உசுப்பேத்த வாடைகைக்கு தவில் எடுத்து வந்து நானும் நண்பர்களும் கச்சேரியைத்தொடங்கினோம்...எங்கள் கல்லூரிக்கு அது புதுசுதான்....இருப்பினும் எங்கள் விபரீதத்தைப் பெருக்கினோம்....எது வரினும் எதிர்கொள்வோம் எனும் நம்பிக்கையில் தேர்தல் முடிவுக்காய் காத்திருந்தோம்....முடிவு எங்களுக்கு சாதகமானதால் ஓர் கலவரம் கணநேரத்தில் நடந்து முடிந்தது.....இப்படி சரியெனப்பட்டால் துணிவதும் துணிந்தபின் தயங்காது தொடர்வதும் இன்னும் தொடர்கிறது....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது வெளிப்படையாய் இருப்பாதால்தான் இன்றும் எனக்கான நண்பர்கள் என் உயிரோடு கலந்திருக்கிறார்கள்.....யார் எங்கே என்றெல்லாம் கிடையாது மனதில் உள்ளதை அப்படியே வெளிக்கொணர்வேன்...

அப்பாட முடிச்சாச்சு...


Sunday, January 7, 2007

வெயிலில் விடுபட்ட வெளிச்சங்கள்!

மாண்டேஜ்களில் கிராமத்து பால பருவத்தை "வெயில்"திரைப் படத்தின்மூலம் "வெயிலோடு விளையாடி"பாடலில் க்ளிக் செய்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.....
அதுபோல வெயிலில் விடுபட்ட வெளிச்சங்களாய் இதோ சிலவற்றை நானும் விரிக்கிறேன்...................

அடைக்கோழி!
அடைக்கோழியின் அடிச்சூட்டில் தவமாய்க்கிடக்கும் முட்டைகளோடு நானும் ஒருவனாய் தவம் கிடந்திருக்கிறேன்..
உலகம் பார்க்க உந்தும் முயற்சியில் தன் நெஞ்சு நிமிர்த்தும் குஞ்சுகளின் ஓடுகள் தட்டும் ஓசைகள் கேட்டிருக்கிறேன்.......
புதிய உயிரின் ஜனனம் பார்க்க விழிகளை விரித்து வைத்திருக்கிறேன்....
முட்டை உடைத்து முதல் ஒலி எழுப்பும் சப்தம் தாய்க்கோழியை மட்டுமல்லாது என் இதயத்திற்குள்ளும் ஏதோ நிகழ்த்துவதை உணர்ந்திருக்கிறேன்....
நிறைவுறா தவத்தோடும், பிறவிப்பயன் எய்தா விரக்தியோடும் வெம்மையாய் விரிந்து கிடக்கும் "கூமுட்டைகளோடு" நானும் என் சோகம் பகிர்ந்திருக்கிறேன்......

குத்துக்கல் சாமி !
கொள்ளைக் காட்டிலோ வயல்வெளியின் ஓர் ஓரத்திலோ அடையாளத்திற்காக வைக்கப்படும் குத்துக்கல்லே எங்கள் பாலபருவத்தின் குலச்சாமியாக கருதப்படும்........
சாமிக்கு விழா எடுக்க திடீர் கூட்டம் அரங்கேறும்...விழாஏற்பாடுகள் உடனேத் தொடங்கி விடும்..சாமியைக் குளிப்பாட்டி...சந்தணப் பொட்டிட்டு..எங்கோ கிடைத்த கிழிசல் ஆடைகளே அலங்காரமாகி...அற்புதமாய் எங்கள் ஆராவாரம் தொடங்கிவிடும்........
பனைஓலைகளின் குருத்துக்கள் எடுத்து நாதஸ்வர வித்துவான்கள் நாதஸ்வரம் உருவாக்குவதும்,பூவரசு இலையில் சில லோக்கல் வித்துவான்கள் ஒத்துக்கள் செய்வதும் பரபரப்பாய் நடைபெறும்..
கொட்டாங்குச்சியின் தாளமும்,வாய்வழி ரண்டக்காவும்..குலவிச்சப்தமும்,குருத்தோலை நாதஸ்வரமும் விழாவை அமர்க்களப் படுத்தும்..
வேப்பிலைகளோடு சாமிகொண்டாடிகள் உச்சகட்டத்தில் அருள்வந்தாட...
கூமுட்டைகள் குத்துக்கல் சாமியின் மீது குவியலாய் எறியப்படும்..
முட்டை அபிஷேகம் செவ்வனே முடிந்தததும் வயல்வெளியின் சகதியில் உருண்டு.. புரண்டு..சகதியையே சந்தணமாக்கி எங்கள் ஆராவாரத்தை அர்ப்பணிப்போம்...
இறுதியில் கண்கள் சிவக்க குளத்தில் குளித்து ,குத்துக்கல்லை முழுதும் மறந்து வீடு வருவோம்....திட்டோ, புட்டோ எது கிடைத்தாலும் வாங்கிக்கொண்டு அந்த நாளை அத்துடன் முடிப்போம்.......
.........வெளிச்சம் இன்னும் விரியும்


Saturday, January 6, 2007

வளர்க சினிமா !

சமீபத்தில் இயக்குநர் சங்கர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் G.வசந்தபாலன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் வெயில்..


விஞ்ஞான வியப்பில் மிக மிக முக்கியமானது சினிமா எனும் ஊடகம்..அந்தப் பொக்கிஷத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பாதால் வசந்தபாலனுக்குப் பாராட்டுக்கள்...
வெறும் COMMERCIAL கலவையாகத் திரைப்படங்கள் உருப்பெற்று சீரழியும் இந்த காலகட்டத்தில் உண்ர்வுகளுக்கு உயிர்கொடுத்து உயிர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் சிறந்த படமாக வெயில் நம் மீது விழுந்துள்ளது...


ந்ம் பண்பாடு,கலாச்சாரம்,வட்டார வழக்கு,இன்னும் மிச்சமிருக்கும் நம் கிராமத்து வாழ்க்கைமுறை ..என அத்தனையும் அப்படியே பதிவு செய்து நம் அடையாளத்தைப் பாதுகாத்திருக்கிறது இந்த வெயில்...


மனுகுலத்தின் தோற்றம், வள்ர்ச்சி,மாறுபாடுகள் அனைத்தும் நம் எதிர்கால சந்ததிக்கு சரித்திரமாக வேண்டும் எனில் இது போன்ற படங்கள் வரவேற்கப்படவேண்டும்...


பொழுதுகளைப் போக்கும் படமாக இல்லாமல்..பொழுதுகளை ஆக்கும் இது போன்ற படங்களே நம் பார்வைக்குப் படவேண்டும்..


படைப்பாளிகள் மட்டுமல்ல பார்வையாளர்களாகிய நாமும் சிற்பிதான் இனிமேலாவது நம் பார்வையை செதுக்கி,ந்ம் ரசனையை உயர்தரமாக்குவோம்...


அகிரோகுரோசாவாக்களும்,சத்யஜித்ரேக்களும் நம்முள்ளும் உருவாக ,உருவாக்க நம் பார்வையின் தரம் மிக முக்கியம்..நல்ல படங்களை ஆதரிக்கும் பாங்கு நம்முள் வந்துவிட்டால்....உணர்வுகளைப் புரிதலில் நமக்குள் உடன்பாடு ஏர்பட்டால்..குத்துப்பாட்டும், குமட்டும் வசனங்களும் காணாமல் போய்விடும் என்பது உண்மை..


பாலாபிஷேகம் செய்யும் ஓர் ரசிகனாய் இல்லாமல்..பதறுகள் நீக்கும் ஓர் விமர்சகனாய் படங்களைத் தேர்வுசெய்வோம்..ஊடகத் தன்மையின் சிறப்பை உணர்ந்து உலகம் உயர்த்த முயற்ச்சிப்போம்...


வளர்க சினிமா!..................


Monday, January 1, 2007

உழவர் திருவிழா !

பாட்டாளி வர்க்கத்திற்கு
இன்றுதான்
பட்டமளிப்பு விழா !

நரம்புகள் வரம்பு மீற
வியர்வைகள் வெள்ளை ரத்தமாய் கசிய
கழனியில் கால் பதிக்கிறானே
அந்தக் கடவுளின் திருவிழா!

உயிரை விதைத்து
பயிரை வளர்த்து
உன்னையும் என்னையும் உயிர்ப்பித்தானே
அந்த உழவனின் திருவிழா!

சூரியனை நிலவாக்கி
கடும் சூட்டைப் பனியாக்கி
உயிரை அற்பமாக்கி
உனக்காக வாழ்கிறானே
அந்த உத்தமன் திருவிழா!

நாவின் இனிமைக்கும்
உன் நவரச உணவிற்கும்
தன் ஆவி இழக்கிறானே
அந்த நல்லவன் திருவிழா!

விண்ணுக்கு சென்று
நிலவைத் தொடுபவன்
நீயாக இருக்கலாம்
ஆனால்
மண்ணுக்குள் புதைந்து
பல மணிகளைத் தருபவன்
என்னவன் அல்லவா!

என்ன நிலவிலும்
நீர் இருக்கிறதா?
போதும்! போதும்!
பூமியிலேயே
இப்புண்ணியவன் படும் கஷ்டம்!

புசிப்பது நாம்
நன்றாய் வசிப்பது நாம்
வாழ்வில் கசிவது மட்டும்
அவன்தானாம்
அது ஏன் ?

ஊரைத் திருத்தலாம்
நாட்டைத் திருத்தலாம்
ஏன்!
இந்த உலகையே திருத்தலாம்
ஆனால்
என்னவன் மட்டும்
மண் நிலம் திருத்தாவிடில்
உன் நலம் எங்கே
உயரப் போகிறது!

வியர்வைத் துளிகளின்
வித்தியாசப் பரிமாணம்தான்
கரும்புச் சாறு
இனிப்பென்றா நினைத்துவிட்டாய்!
ஆம்!
உன் உளம் இனிப்பாக
என்னவன் உரமாகிறான்.

அதோ பாருங்கள்
தன்னை ஈன்றவனுக்கு
தலை வணங்கும் பயிர்களை!

அங்கேத் தெரிவது
நெல் மணிகள் அல்ல
என்னவன் சிந்திய
இரத்தத் திட்டுக்கள்!..