தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, March 21, 2008

இப்படிக்கு நாளைய வாசகன்...



சமீபத்திய பெரும் இழப்பு நம் சுஜாதா அவர்கள்...

அவர்களது இரங்கல் கூட்டம் சென்னை 'நாரதகான சபாவில்' நடை பெற்றது,பிரபல எழுத்தாளர்கள்,திரையுலக பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...அவரது "நரேந்திரனின் வினோத வழக்கு"மேடை நாடகத்தை தற்பொழுது சென்னையில் திரு பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் மாணவர் திருMB மூர்த்திஅவ்ர்களால் "குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் '95 " எனும் அமைப்பு நடத்தி வருகிறது...அந்நாடகத்தில் வசந்த் பத்திரத்தில் நான் நடித்து வருவதால் எங்கள் குழுவின் சார்பில் நானும் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டேன்...அப்பொழுது அங்கே பேசியவர்களின் ஆதங்க வெளிப்பாடுகளே இக்கவிதை...

சுஜாதாவைப் புரிந்து கொண்ட எதிர்கால தலைமுறையை சார்ந்த நாளைய வாசகன் ஒருவன் எழுதுவது போல் இக்கவிதயைத் தொடர்கிறேன்....



எங்கள் நினைவை ஆளும்
சுஜாதாவிற்கு!


தங்களின்
புத்தக அருள் கிடைத்த
கோடானகோடிகளில்
நானும் ஒருவன்...


எம் காலத்திற்கு
சற்று முன்னர்தான்
தாங்களும் வாழ்ந்திருக்கிறீர்கள்..

எம் முன்னோர்கள்
புண்ணீயம் செய்தவர்கள்
நீங்கள் வாழ்ந்த காலத்தில்
அவர்கள் வாழ்ந்தது..

நாங்கள் பாவம் செய்தவர்கள்
நாங்கள் வாழும் காலத்தில்
தாங்கள் இல்லாதது..

நான்
கேள்விப் பட்டிருக்கிறேன்...

நவீன இலக்கியம்
உன்னால்தான் ருசித்ததாம்...

நாங்கள்
அமுது சுவைப்பதற்காகவே
நீ விஷம் குடித்தாயாம்...

சதா சர்வமும்கருக்களைச்
சுமந்தே திரிவாயாம்..

அமீபா தொடங்கி
அகிலமும் விரித்த
ஆச்சரியம் நீதானாம்..

அமிலத் தன்மையாய்
அடர்ந்திருந்த
அறிவியல் தமிழை
அமுதத் தன்மைக்கு மாற்றியவனும்
நீதானாம்...

ஒரு துளி மையில்
உலகையே அளப்பாயாம்...

எழுத்துக்களுக்கே மோட்சம்
உன்
எழுதுகோல் நுனியாம்..

வேதியல் மாற்றம் சொல்லி
வியக்கவும் வைப்பாயாம்
'வேறு'இயல் மாற்றம் சொல்லி
வீரியமும் வளர்ப்பாயாம்....

sense of humour
sex of humour
உனக்கு நிகர் நீயேதானாம்..

இருப்பினும்
நானேதான் கேள்விப்பட்டேன்...
உன் காலத்தில்
சுப்பர்ஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்
அல்டிமேட் ஸ்டார்
என எல்லா ஸ்டார்களும்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
சினிமாக் காரர்களுக்கு
மட்டுமேஉரியதாம்...

அன்றைய ஒட்டு மொத்த
தமிழினமும்
ஓர் ஓற்றை முடியில்
கிறங்கிக் கிடந்ததாம்...

அந்த விக் அவிழும்
அழகியல் பார்க்க
தன் பொழுதுகளை
விரையப் படுத்தியதாம்...

அவர்கட்கு கிடைத்த
அந்த்ஸ்த்து,பணம்,புகழ்
கட்அவுட்,பாலாபிஷேகம் உட்பட
எதுவுமே
தங்களுக்கு இல்லையாம்..

அவர்களின்
commitement இருந்தால் போதுமாம்
கழிசடைக் கருக்கள் கூட
கரன்சிகள் குவிக்குமாம்...

ஆனால்
உனது எந்த புத்தகமும்
இது வரை ரிலீசான
ஒரே நாளில்
குறைந்த பட்சம்
ஒரு லட்சம் பிரதி கூட
விற்றதில்லையாம்...

உங்கள் தலைமுறையில்
தலைவன்,
வழிகாட்டி,முதல்வன்
எல்லாமே அவர்கள்தானம்....

அவர்களின்
விரல் அசைவிற்காகவே
தவித்துக் கிடந்ததாம்
தமிழினம்..

ஓர் புத்தக சாலையைத் திறந்தால்
பல சிறைச் சாலைகள்
மூடப்படுமாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்...

அனால்
உன் காலத்திலோ
அதிகம் திறக்கப்பட்டது
திரை அரங்கம்தானாம்...

அதுவும்
பல திரை அழகியரின்
பொற்கரம்பட்டே
பல பெரு நிறுவனத்தின்
வாசல் திறந்ததாம்....

அப்படி
என்ன செய்துவிட்டார்கள்
அவர்கள்?

நாங்கள்
புசிப்பதற்காகவேநீ
பசித்துக் கிடந்தாய்

நாங்கள் தழைக்கநீ
தூக்கம் தொலைத்தாய்..

ஆனால் அவர்கள்???????????

விருதுகள் கூட உன்னை
விட்டுவிலகியே சென்றதுவாம்...
ஆனால்
எம் காலம் அப்படி அல்ல...

இது
புது யுகம்
புத்தக யுகம்..

புத்தக சாலைகளேஎங்கள்
புனித ஆலையங்கள்...

எங்கள் வீடுகளில்
பூஜை அறையை விடவும்
முக்கியமானது
புத்தக அறைகளே..

நாங்கள்ஊர்கூடித்
தேர் இழுப்பதை விடவும்
அதிகம் விரும்புவது
ஊர்கூடி புத்தகம் படிப்பதையே...

எங்களின் மிகப்பெரியத் திருவிழா
புத்தகக்கண்காட்சி...

ஆம்!
எம்காலத்திலும் ரசிகன் உண்டு
ஆயினும்....

நாங்கள் வாசகர்களாகவே
ஜனிக்கும் படி
ஜெனிட்டிக்ஸ் மாற்றப்பட்ட்வர்கள்...

இதொ!
உன்
புதிய புத்தகத்திற்காய்
காத்துக் கிடக்கிறது
எம் தலைமுறை

அறிவிப்பை வெளியிடு
அடுத்த நொடியே
நாங்கள்
அனைவரும் ஆஜர்...

எங்களைப்
புத்தகப் புழுக்களாய்ப்
பிரசவித்தவனே.........

உன் தூண்டிலில்
கொழுவிக்கொள்ளவே
ஆசைப்படும் புழுக்கள் நாங்கள்...

உன்
எழுத்துக்களே
எமக்கு சூரிய நமஸ்காரம்...

விரும்பத் தவிர்க்கும்
பாடப்புத்தகமல்ல
விரும்பித் தவிக்கும்
ஞானப் புத்தகம் நீ....

எழுத்தறிவித்தோனே!
மறுபிறவி என
ஒன்று உண்டெனில்
ஒரு வேண்டுகோள்...
ரோபோக்களின் மொழிகளை
எங்கள் வகுப்பறைகள்
ஏற்றுக் கொள்வதாய் இல்லை..

ஆதலால் வா
வந்து மொழிப்பெயர்த்து விட்டுப் போ
ஏனெனில்

உன்னால் மட்டுமே சாத்தியம்
அதை மொழிப்பெயர்க்கும்
சாமர்த்தியம்....

இப்படிக்கு
நாளைய வாசகன்
சு.பி ஒன்றாம் நூற்றாண்டு...
(சு.பி சுஜாதாவிற்கு பின்)


நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தில் வசந்தாக நான்,(வசந்த் பொண்ணுக பக்கம்தாங்க நிற்பான்)


0 comments: