தேடலும் தேடல் நிமித்தமும்..

Sunday, January 7, 2007

வெயிலில் விடுபட்ட வெளிச்சங்கள்!

மாண்டேஜ்களில் கிராமத்து பால பருவத்தை "வெயில்"திரைப் படத்தின்மூலம் "வெயிலோடு விளையாடி"பாடலில் க்ளிக் செய்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.....
அதுபோல வெயிலில் விடுபட்ட வெளிச்சங்களாய் இதோ சிலவற்றை நானும் விரிக்கிறேன்...................

அடைக்கோழி!
அடைக்கோழியின் அடிச்சூட்டில் தவமாய்க்கிடக்கும் முட்டைகளோடு நானும் ஒருவனாய் தவம் கிடந்திருக்கிறேன்..
உலகம் பார்க்க உந்தும் முயற்சியில் தன் நெஞ்சு நிமிர்த்தும் குஞ்சுகளின் ஓடுகள் தட்டும் ஓசைகள் கேட்டிருக்கிறேன்.......
புதிய உயிரின் ஜனனம் பார்க்க விழிகளை விரித்து வைத்திருக்கிறேன்....
முட்டை உடைத்து முதல் ஒலி எழுப்பும் சப்தம் தாய்க்கோழியை மட்டுமல்லாது என் இதயத்திற்குள்ளும் ஏதோ நிகழ்த்துவதை உணர்ந்திருக்கிறேன்....
நிறைவுறா தவத்தோடும், பிறவிப்பயன் எய்தா விரக்தியோடும் வெம்மையாய் விரிந்து கிடக்கும் "கூமுட்டைகளோடு" நானும் என் சோகம் பகிர்ந்திருக்கிறேன்......

குத்துக்கல் சாமி !
கொள்ளைக் காட்டிலோ வயல்வெளியின் ஓர் ஓரத்திலோ அடையாளத்திற்காக வைக்கப்படும் குத்துக்கல்லே எங்கள் பாலபருவத்தின் குலச்சாமியாக கருதப்படும்........
சாமிக்கு விழா எடுக்க திடீர் கூட்டம் அரங்கேறும்...விழாஏற்பாடுகள் உடனேத் தொடங்கி விடும்..சாமியைக் குளிப்பாட்டி...சந்தணப் பொட்டிட்டு..எங்கோ கிடைத்த கிழிசல் ஆடைகளே அலங்காரமாகி...அற்புதமாய் எங்கள் ஆராவாரம் தொடங்கிவிடும்........
பனைஓலைகளின் குருத்துக்கள் எடுத்து நாதஸ்வர வித்துவான்கள் நாதஸ்வரம் உருவாக்குவதும்,பூவரசு இலையில் சில லோக்கல் வித்துவான்கள் ஒத்துக்கள் செய்வதும் பரபரப்பாய் நடைபெறும்..
கொட்டாங்குச்சியின் தாளமும்,வாய்வழி ரண்டக்காவும்..குலவிச்சப்தமும்,குருத்தோலை நாதஸ்வரமும் விழாவை அமர்க்களப் படுத்தும்..
வேப்பிலைகளோடு சாமிகொண்டாடிகள் உச்சகட்டத்தில் அருள்வந்தாட...
கூமுட்டைகள் குத்துக்கல் சாமியின் மீது குவியலாய் எறியப்படும்..
முட்டை அபிஷேகம் செவ்வனே முடிந்தததும் வயல்வெளியின் சகதியில் உருண்டு.. புரண்டு..சகதியையே சந்தணமாக்கி எங்கள் ஆராவாரத்தை அர்ப்பணிப்போம்...
இறுதியில் கண்கள் சிவக்க குளத்தில் குளித்து ,குத்துக்கல்லை முழுதும் மறந்து வீடு வருவோம்....திட்டோ, புட்டோ எது கிடைத்தாலும் வாங்கிக்கொண்டு அந்த நாளை அத்துடன் முடிப்போம்.......
.........வெளிச்சம் இன்னும் விரியும்


Saturday, January 6, 2007

வளர்க சினிமா !

சமீபத்தில் இயக்குநர் சங்கர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் G.வசந்தபாலன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் வெயில்..


விஞ்ஞான வியப்பில் மிக மிக முக்கியமானது சினிமா எனும் ஊடகம்..அந்தப் பொக்கிஷத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பாதால் வசந்தபாலனுக்குப் பாராட்டுக்கள்...
வெறும் COMMERCIAL கலவையாகத் திரைப்படங்கள் உருப்பெற்று சீரழியும் இந்த காலகட்டத்தில் உண்ர்வுகளுக்கு உயிர்கொடுத்து உயிர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் சிறந்த படமாக வெயில் நம் மீது விழுந்துள்ளது...


ந்ம் பண்பாடு,கலாச்சாரம்,வட்டார வழக்கு,இன்னும் மிச்சமிருக்கும் நம் கிராமத்து வாழ்க்கைமுறை ..என அத்தனையும் அப்படியே பதிவு செய்து நம் அடையாளத்தைப் பாதுகாத்திருக்கிறது இந்த வெயில்...


மனுகுலத்தின் தோற்றம், வள்ர்ச்சி,மாறுபாடுகள் அனைத்தும் நம் எதிர்கால சந்ததிக்கு சரித்திரமாக வேண்டும் எனில் இது போன்ற படங்கள் வரவேற்கப்படவேண்டும்...


பொழுதுகளைப் போக்கும் படமாக இல்லாமல்..பொழுதுகளை ஆக்கும் இது போன்ற படங்களே நம் பார்வைக்குப் படவேண்டும்..


படைப்பாளிகள் மட்டுமல்ல பார்வையாளர்களாகிய நாமும் சிற்பிதான் இனிமேலாவது நம் பார்வையை செதுக்கி,ந்ம் ரசனையை உயர்தரமாக்குவோம்...


அகிரோகுரோசாவாக்களும்,சத்யஜித்ரேக்களும் நம்முள்ளும் உருவாக ,உருவாக்க நம் பார்வையின் தரம் மிக முக்கியம்..நல்ல படங்களை ஆதரிக்கும் பாங்கு நம்முள் வந்துவிட்டால்....உணர்வுகளைப் புரிதலில் நமக்குள் உடன்பாடு ஏர்பட்டால்..குத்துப்பாட்டும், குமட்டும் வசனங்களும் காணாமல் போய்விடும் என்பது உண்மை..


பாலாபிஷேகம் செய்யும் ஓர் ரசிகனாய் இல்லாமல்..பதறுகள் நீக்கும் ஓர் விமர்சகனாய் படங்களைத் தேர்வுசெய்வோம்..ஊடகத் தன்மையின் சிறப்பை உணர்ந்து உலகம் உயர்த்த முயற்ச்சிப்போம்...


வளர்க சினிமா!..................


Monday, January 1, 2007

உழவர் திருவிழா !

பாட்டாளி வர்க்கத்திற்கு
இன்றுதான்
பட்டமளிப்பு விழா !

நரம்புகள் வரம்பு மீற
வியர்வைகள் வெள்ளை ரத்தமாய் கசிய
கழனியில் கால் பதிக்கிறானே
அந்தக் கடவுளின் திருவிழா!

உயிரை விதைத்து
பயிரை வளர்த்து
உன்னையும் என்னையும் உயிர்ப்பித்தானே
அந்த உழவனின் திருவிழா!

சூரியனை நிலவாக்கி
கடும் சூட்டைப் பனியாக்கி
உயிரை அற்பமாக்கி
உனக்காக வாழ்கிறானே
அந்த உத்தமன் திருவிழா!

நாவின் இனிமைக்கும்
உன் நவரச உணவிற்கும்
தன் ஆவி இழக்கிறானே
அந்த நல்லவன் திருவிழா!

விண்ணுக்கு சென்று
நிலவைத் தொடுபவன்
நீயாக இருக்கலாம்
ஆனால்
மண்ணுக்குள் புதைந்து
பல மணிகளைத் தருபவன்
என்னவன் அல்லவா!

என்ன நிலவிலும்
நீர் இருக்கிறதா?
போதும்! போதும்!
பூமியிலேயே
இப்புண்ணியவன் படும் கஷ்டம்!

புசிப்பது நாம்
நன்றாய் வசிப்பது நாம்
வாழ்வில் கசிவது மட்டும்
அவன்தானாம்
அது ஏன் ?

ஊரைத் திருத்தலாம்
நாட்டைத் திருத்தலாம்
ஏன்!
இந்த உலகையே திருத்தலாம்
ஆனால்
என்னவன் மட்டும்
மண் நிலம் திருத்தாவிடில்
உன் நலம் எங்கே
உயரப் போகிறது!

வியர்வைத் துளிகளின்
வித்தியாசப் பரிமாணம்தான்
கரும்புச் சாறு
இனிப்பென்றா நினைத்துவிட்டாய்!
ஆம்!
உன் உளம் இனிப்பாக
என்னவன் உரமாகிறான்.

அதோ பாருங்கள்
தன்னை ஈன்றவனுக்கு
தலை வணங்கும் பயிர்களை!

அங்கேத் தெரிவது
நெல் மணிகள் அல்ல
என்னவன் சிந்திய
இரத்தத் திட்டுக்கள்!..