தேடலும் தேடல் நிமித்தமும்..
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Sunday, August 23, 2009

போதி

அவனது கடைசி இரவு அது, அதோ காத்திருக்கிறதே ஒரு விஷ பாட்டில் அது அவனுக்காகத்தான்...

இன்னும் சிறிது நேரத்தில் அவன் மரிக்கக் கூடும்,அது நடந்தே தீரும்...
பாவம் நீந்தியே பழக்கம் இல்லாதவனுக்கு ,எதிர் நீச்சல் எப்படி சாத்தியமாகும்? காணும் இடமெல்லாம் இருளே சூழ்ந்து கிடப்பதாலும்,அப்படித்தான் அவன் நம்புவதாலும் வெளிச்சம் விரிக்க வேண்டிய வயதில் விதியை சுருக்க முற்படுகிறான்.

இன்னும் சிறிது நேரத்தில் மரணத்தை நிகழ்த்தியே தீருவேன் என்றபடி இருக்கிறது விஷப் பாட்டில் மீது விரவியிருக்கும் அவ்னது பார்வை...
இருப்பினும் தன் மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனமாய் செலவழிக்கிறான்,

அதோ ஒரு நொடி திடீரென மழைத்துளிகளைப் பிரசவித்து அவனது மரணத்தை பல நொடிகள் ஒத்திவைக்க செய்கிறது,.எத்தனையோ தடவை மழை பார்த்திருக்கிறான்..ஆனால் இன்று மட்டும் ஏனோ அவனுக்குள் அப்படியோர் தவிப்பு.,மழை வரும் பொழுதுகளை எல்லாம் அவன் விடும் கண்ணீர் பொழுதுகளாய் ஆக்கியதின் விளைவு அது.
தன் மரணுத்துக்கு முந்திய கடைசி நொடிகளில் அவந்தான் கேட்கிறான்,மழை இத்தனை அழகானதா?முதன் முதலாய் வியக்க ஆரம்பிக்கிறான்...பாவம்! ரசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தெரிந்திருந்தால் அவன் ஏன் விஷப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும்?ஒட்டுமொத்த உலகத்தையும் இன்றுதான் உற்று நோக்குகிறான் அல்லது உணர்கிறான்..

நீண்டு நெடிந்திருக்கும் அந்த நகரத்து வீதியில் அவனது விழிகள் விரிகிறது, அதோ! வற்றிப்போன மார்பை சுவைத்துக்கொண்டிருக்கும் ஓர் platform தாயின் குழந்தை என்னமாய் சிரிக்கிறது?

அட! என் வயதை ஒத்தவர்கள்தான் இந்த குப்பை அள்ளுபவர்கள் கும்மியடித்துக்கொண்டே எத்தனை அழகாய் குப்பை அகற்றுகிறார்கள்?

அதோ கூர்கா தயாராகிறான் பாஷை தெரியா பாடலை முனுமுனுத்துக்கொண்டே,பாஷை தெரியாவிடினும் அவ்ன் சந்தோசம் என்னையும் அல்லவா ஏங்க வைக்கிறது?

இரவு இத்தனை ரம்மியமானதா?ஒளிர்ந்து கிடக்கும் விளக்குகளையும்,தெளிந்து கிடக்கும் வானத்தையும் நோக்குகிறான்,வெளிச்சம் இருக்கத்தானே செய்கிறது என்பது போல் மனதைக் கேட்கிறான்...

விஷப்பாட்டில் ஏமாற்றிவிடுவானோ என்னுமொரு கோணத்தில் அவனை பயமுறுத்துகிறது அல்லது மீண்டும் அவனது மரண நொடிகளை ஞாபகப் படுத்திற்று...

தன் தாயை நினைத்துப் பார்க்கிறான்..அம்மா...அம்மா...அம்மா....உன் தாலியை விடுத்து எனக்கு கல்வியைக் கொடுத்தாய்,உன் காய்ந்த வயிறுக்கு நான் ஏதம்மா கொடுத்தேன்?
நான் என்ன செய்வேன்?என்னால் முடியாது போயிற்றே நான் இருந்தும் என்ன பயன்?
இதோ!உன் மகன் இறக்கப் போகிறேன் ஒட்டு மொத்தமாய் ஒரு நிம்மதிக்காக இறக்கப் போகிறேன்.
நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறுகிறான்...அவனது இயலாமை மீண்டும் இயங்கத்தொடங்கிற்று...ஆவேசம் வந்தவனாய் விஷப்பாட்டில் எடுக்கிறான்,கண்ணைமூடி ஒரே மடக்கில் குடித்துவிட ஆயத்தமாகிறான்.....கண்களை மூடுகிறான் ,முடியவில்லை கை நடுங்கிற்று,அம்மாவின் முகம் வந்து வந்து போகிறது..... அம்மா..அம்மா....அம்மா...அழத்தொடங்குகிறான்...அம்மாவின் குரலையாவது கேட்டுவிடமாட்டோமா என அவசியப்படுகிறான்.......சில நொடிகள் தள்ளிப் போகிறது...

விஷப்பாட்டில் மட்டும் Waiting.....

அம்மாவைப் பற்றிய தாகம் அதிகரிக்க,அதிகரிக்க.....அவசர அவசரமாக ஓர் தொலைபேசி நிலையத்தை அடைகிறான்....எண்களை சுழற்றுகிறான்,பக்கத்து வீட்டு அக்காவிடம் சொல்லி அம்மாவை அழைத்துவர சொல்கிறான்,சிறிது நேரத்திலேயே எய்யா ராசா எனும் ஏக்கத்தோடு எதிர்முனையில் அம்மாவின் குரல்...
கேட்ட மாத்திரத்திலேயே அவன் நெஞ்சு அடைக்கிறது,விழிகள் வெடிக்கிறது...
எதிர் முனையில் மட்டும் ஒரு ஏக்கத்தவிப்பு விட்டு விட்டு ஒலிக்கிறது....

பேச நா எழவில்லை...ரிசீவரை வைத்துவிட்டு விம்மியபடியே கடைகாரரை நெருங்குகிறான்...

கடை காரரும் வருந்தியபடியே ,என்ன சார்?ஏன் சார் அழுறீங்க?கவல படாதீங்க சார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...உங்க கண்ணீரை நான் உணர்கிறேன் அழாதீங்க சார் அழாதீங்க என்கிறார்...

யோ! கண்ணுனு இருந்தா அழுக வரத்தான் செய்யும்,அதுலான் உனக்கு இப்ப எதுக்கு இந்தா என 10 ரூபா நோட்டை எரிச்சலோடு நீட்டுகிறான்,
கடைகாரர் அதை நிதானமாக வாங்கி விரல்களால் விட்டமளக்கிறார்...

என்ன சார்? நல்ல நோட்டா கள்ள நோட்டானு பாக்குறீங்களா?நல்ல நோட்டுதான் என மீண்டும் எரிந்துவிழுகிறான்...

சற்று நிதானத்துடன் கடை காரர் தொடர்கிறார் ஏன் சார்? ஏன் எதுக்கெடுத்தாலும் விரக்தியில பேசுறீங்க?நீங்க கொடுக்குற இந்த காசுதான் ஏதோ ஒரு விதத்துல என் அம்மாவுக்கும்,சகோதரிக்கும் சந்தோசத்தக் கொடுக்குது எனக்கான கடமை இது சார்...

அப்புறம் என்ன சொன்னீங்க?கண்ணுனு இருந்தா அழுக வருமா?கண்ணு இல்லாட்டியும் கூட அழுக வரும் சார்,மெதுவாக தன் கண்ணாடியை கழற்றுகிறார்...அங்கே விழிகள் இல்லாது இரு குழிகள் மட்டுமே இருளை அப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான்...
என்ன சார் பேசாம நிக்குறீங்க?.....நா பிறவிக் குருடன்....இருந்தாலும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு,என்னிக்குமே அத தவிக்க விட்டதில்ல..உங்களுக்கு என்ன சோகமோ எனக்குத் தெரியாது,ஆனா சோகம் என்பது நிரந்தரமல்ல அத மட்டும் புரிஞ்சுக்கோங்க...விழி என்பது எனக்கான குறை பாடு மட்டுமே அத என்னிக்குமே சோகமாகவோ,சுமையாகவோ நா நினைச்சதில்ல......இந்தாங்க மீதி சில்லறை என தெளிவாய் எண்ணிக் கொடுக்கிறார்....நா ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சி....அதற்குள் அவர் கரங்களைப் பற்றி நீங்கதான் சார் என்ன மன்னிக்கனும்,..இவ்வளவு நாளும் கண் இருந்தும் இருட்ட மட்டுந்தான் பழக்கப்படுத்தி வந்திருக்கேன்...ஆனா நீங்களோ வெளிச்சம்கிறது புறம் மட்டுமல்ல அகத்தையும் சார்ந்ததுனு புரிய வச்சிட்டீங்க....எனக்குள்ளும் இப்போ வெளிச்சம் கிடச்சாச்சு...என் போதியே உங்களை வணங்குகிறேன்..நிறைந்த மனதோடு வெளியில் வருகிறான்...வானத்தில் ஒரு வளர்பிறை தன் பெளர்ணமிக்கான பயணத்தை தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடக்கிறான்......தூரத்தில் எங்கோ விஷப்பாட்டில் உடையும் சப்தம் கேட்கிறது.


Friday, December 1, 2006

கற்பவை கற்றபின்...(சிறுகதை)

பாவம் இந்த பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும்?..அதற்காக இப்படியா?..
கண்ணீர்த் துளிகளை உதிர்த்துக் கொண்டே விரிந்திருக்கும் கோரம்பாயில் விரிந்து கிடக்கும் தன் அஞ்சு வயது பிஞ்சு மகனுக்கு உப்பிய காயங்களில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான் ஏழுமலை.

அப்படி அவன் என்னதான் செய்துவிட்டான்?..
இப்படி துவைத்து எடுத்து விட்டார்களே.. நினைக்கும் போதே நெஞ்ச குமுறினான் ஏழுமலை...

சாய்ங்காலம் தேர் வீதியில் நடந்த சம்பவத்தால் ரெம்பவும் நொறுங்கிப் போயிருந்தான் ஏழுமலை, அதுவும் இந்த சிறு வயதில் அந்த சிறுவன் கேட்ட கேள்விகள் இன்னும் அவனை ரணப் படுத்தியது..

"அப்பா..ஏம்பா நாம மட்டும் சாமி கும்பிட கூடாதா?..
எல்லாப் பசங்களூம் கோயிலுக்குள்ள போயி சாமிய பாக்காங்க நம்மள மட்டும் ஏம்பா உடமாட்டுக்காங்க ?
நா இழுத்தா மட்டும் தேர் நகராதா?
அவங்கெல்லாம் வடத்த தொடுதாங்க நா போயி தொட்டா மட்டும் ஏம்பா என்ன இப்படி அடிச்சிட்டாங்க?
நீங்கதாம்பா சொன்னீங்க கடவுள்தான் இந்த உலகத்தயே காக்கிறவர்னு..
அந்தக் கடவுள நாம மட்டும் ஏம்பா பாக்ககூடாது?...
உடல் காயமும் உள்ளக்காயமும் அவனை பெரிதும் பாதித்ததால் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்..

என்னதான் செய்வான் ஏழுமலை...
எப்படி அச்சிறுவனுக்குப் புரிய வைப்பது?
நாமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள்,
நாம எப்பவுமே அவங்களுக்கு கீழதானு சொன்னா இவனுக்கு புரியுமா?
நாம தேர் வடத்த தொட்டா நகராதானு கேக்குறானே
நாம தேர் வீதி போனதே தீட்டு அல்லவா?
ஏதோ தேர் திருவிழாவ பாக்க ஆசபட்டானேனு தெரியாம கூட்டுப்போய்ட்டேன் ஆனா இப்படி ஆயிடுச்சே..
கண்ணீர் வற்றிய கண்களோடு தன் மகனை அணைத்து கண் அயர்ந்தான் ஏழுமலை.

ஆனால் அந்த பிஞ்சு உள்ளத்துக்கோ இரவு முழுதும் தேர் வீதியைப் ப்ற்றிய நினைப்புதான்...
தன் வயசுப் பசங்க ஓடி விளயாட்றது,
மேள சத்தம், பந்தல் அலங்காரம்,
புதுசாப் பூத்தக் கடைகள், விதவிதமான பாடல்கள்,
தேர் நகரும் போது எழும் சப்தம்,
ஆசையோடு போய் தேர் வடம் தொட்டதால் கிடைத்த உதை அத்தனயும் அந்த இரவை விழுங்கியிருந்தது..

அதெல்லாம் பழய கதை...
இனிமே கோயில் பக்கமே போககூடாது என்ற முடிவுடன்
பட்டணத்தில் இருக்கும் தன் சித்தி வீட்டில் இருந்து படித்து ,
பட்டமும் பெற்று
இன்று கலக்டர் அளவுக்கு உயர்ந்தும் விட்டான்..
அதுவும் அவன் ஊர் இருக்கும் மாவட்டத்திலேயே உத்யோகம் ...

இரண்டு மாமாங்கம் முடித்து ஊருக்குள் கலெக்டர் முத்திரையோடு நுழைகிறான்...
வரும் வழியில் தேர் கம்பீரமாக நிற்கிறது
உயர்ஜாதிக்காரன் தொட்டதாலொ என்னவோ என மனதில் நினைத்துக் கொள்கிறான்..
ஊர் பெரியவர்கள் மரியாதையை எற்றுக்கொண்டு தன் தந்தையின் காலில் விழுந்து வணங்குகிறான்...
நாட்டாமை வெளியில் நிற்கிறார் என ஒருவர் சொல்ல உள்ளே வரச்சொல் என்கிறான்...
என்ன விஷயம் என வினவ..............
வேற ஒன்னுமில்ல ஐய்யா,
நம்ம ஊர்ல வருசா வருஷம் தேர் திரு விழாவ சிறப்பா நடத்திட்டு வர்றோம்...
இந்த வருஷம் நீங்க வந்து வடத்த பிடிச்சு தொடங்கி வக்கனும்..
மென்னு விழுங்கினார் நாட்டாமை....


Wednesday, November 29, 2006

பிறவி குணம் (சிறுகதை)

தனிமையும் தமிழும் எனக்கு மிகவும் பிடித்தவை அதுவும் இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால் ஏக ச்ந்தோஷந்தான்.... ..
அந்த சந்தோஷ நாட்களில் எத்தனையோ கதைகளோடு வழ்ந்திருக்கிறேன்,
எத்தனையோ கவிதைகளோடு ஒன்றியிருக்கிறேன்,
எத்தனையோ கட்டுரைகளை உணர்ந்திருக்கிறேன்,

இருப்பினும் ஒரு ஆதங்கம்... எடுக்கும் எனது மூளைக்கு கொடுக்கும் சக்தி இல்லையோ என்றுதான் ..
படிக்கும் சக்தி இருக்கும் எனக்கும் படைக்கும் சக்தி இருக்கிறதா என்ற நிலை அறிய நானும் சிந்திக்க தொடங்கினேன்..
வாழ்க்கையை உணர்த்தும் நிகழ்வுகளை கதையாக்கும் முயற்சியில் கரு தேடலானேன்..
இரவு நெடுநேரம் மூளையைப் பிசைந்தும் எவ்வித பொறியும் தென்படவில்லை..
காத்திருந்த தூக்கத்திற்கு வழிவிட்டு நிசப்தமானேன்..

காலை 7 மணிக்கெல்லாம் என்னை உசுப்பிவிட்டு காலம் தவறாது தன் கடமை செய்தது கடிகாரம்...சோம்பல் முடித்து, டீயைக் குடித்து காலை கடன் முடிப்பதற்குள் மணி 8 ஐத் தாண்டியிருந்தது.. பரபரப்பும் படபடப்பும் கலந்த நிலையில் கம்பேனிக்குத் தயாரானேன்.....

ப்ரோமொஷன் கிடைத்த மகிழ்ச்சி, புதிய பதவியின் புத்துணர்ச்சி இன்னும் என்னை அவசரப்படுத்தியது..
கிளம்பினேன்.. தினமும் வாசல் வந்து வழியனுப்பும் அம்மாவை நோக்கினேன்...

அதற்குள்...." என்னடா இந்த நேரத்துலயா கெள்ம்புறது? இன்னிக்கு நீ காலண்டரப் பாக்கல 9 மணி வரைக்கும் எம கண்டம்னு போட்டிருக்கு..
இப்ப போயி கெளம்புதம்னு சொல்லுத..
இன்னிக்குதான் பெரிய ஆபிசரா வேலைக்கு போற..
கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்ரமா போ வேண்டியதான.."
சொல்லிவிட்டு நகன்றாள் அம்மா...
அம்மாவின் நம்பிக்கையை அலசிப்பார்த்தேன் மூடநம்பிக்கையின் உச்சம் தெரிந்தது...

இன்னும் தொடர்கிற்தே இந்த அவலம் என்ற ஆதங்கத்தோடும்,ஒருவேளை நல்ல நேரத்தில் கிளம்பி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்? எனும் கேள்விகளோடும் கடிகாரம் பார்த்தேன் எமகண்டத்தை முடித்து வைத்திருந்தது..

மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டேன் நல்லநேரத்தில் அசம்பாவிதம் நடந்தால்? தெளிவாய் கிளம்பினேன் இரவு விட்டுப்போன கதைக்கான கருவோடு..
அலுவல் நேரத்து மிச்சங்களில் எல்லாம் கருவை வளர்க்க ஆரம்பித்தேன்..
அலுவல் முடிந்து வீடு வந்தேன்..கதையை ப்ரசவித்தேன்..

மூடநம்பிக்கையே கதையின் கரு என்பதால் அதையே பெயராக்கி மீண்டும் ஓர் முறை வாசித்துப் பார்த்தேன்...
நிறைவான திருப்தியோடும், நிச்சயம் நம் கதை பிரசுரமாகும் எனும் நம்பிக்கையோடும் அந்தப் பிரபல இதழின் முகவரி பதித்து விடியலுக்காக காத்திருந்தேன்..

பொழுதும் புலர்ந்தது...ஆபிஸ் செல்லும் முன் முதல் வேலையாக போஸ்ட் ஆபிஸ் சென்று நம் கதையை அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும் ,
முதல் படைப்பாயிற்றே என்ற ஆராவாரத்தோடும் இன்றும் அவசரமானேன்...

இதோ...இதோ... கிளம்புகிறேன் ..வாசல் வந்து வழியனுப்ப அம்மாவும் ரெடி.. கிளம்புகிறேன்..

முடியவில்லை ஒரு சிறு உறுத்தல் "இது நான் அனுப்பும் முதல் படைப்பு, இது ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அடுத்தப் படைப்பு ஆனந்தமாய் தொடரும்.."எதற்கும்......எதற்கும்.....காலண்டரைப் பார்க்கலாமா?..காலண்டரை நெருங்குகிறேன்...

கொட்டை எழுத்துக்களில் தெளிவாய்த் தெரிந்தது இன்று கரிநாள் என்று...

வேறு என்ன செய்ய நல்ல நாளுக்காய் காத்திருக்கிறேன்.....